மது குடிக்க பணம்தர மறுத்த மனைவியை எரித்துகொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற சுப்பையா (30). இவர் தனது மனைவி செல்வியுடன் வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே முருகன் என்ற சுப்பையா மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் என்ற சுப்பையா தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி செல்வி பணம் தர மறுத்ததால் மதுபோதையில் இருந்த முருகன் தனது மனைவி செல்வி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கீழவளவு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கணவன் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக வந்தபோது முருகன் என்ற சுப்பையா மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் மனைவி செல்வியை எரித்து கொலை செய்த கணவன் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.







