இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் போன்றவைகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.
இதனால் இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் தீவு நாடான இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் அல்லது இலங்கை செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கான பொதுவான வழிகாட்டி நெறிமுறைகளாவது, இந்தியாவுக்கு வெளியே இந்தியர்களுடன் தொடர்புடைய விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி.
ஆகவே, இலங்கையில் இருக்கும்போது, அனைத்து இந்தியர்களும் கவனத்துடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கை பயணத்திற்கு முன்பு கரன்சி நோட்டுகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழ்நிலை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து காரணிகளை பற்றியும் அவர்கள் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.







