திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் பகுதியிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் போளூர் மஞ்சலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கண்ணமங்கலம், படவேடு, களம்பூர், விண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. காட்பாடி, காங்கேயநல்லூர், அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்த நிலையில், சித்தூர் பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும் குளம் போல மழைநீர் தேங்கியது. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. ஆலப்பட்டி, குருபரப்பள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரு நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், கோடங்கால் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கி உள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா