அதிமுக தலைமை யார்? என்பது குறித்து இன்னும் நீதிமன்றங்களில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டிற்கான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து ஜி20 அமைப்பின் சர்வதேச மாநாட்டை டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பதால் அதை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு நேற்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய அரசும், பாஜக மேலிடமும் அங்கீகரித்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், அதிமுக தலைமைக்கு சட்டரீதியாக நான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான் தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன். இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அதிமுக தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அதிமுகவில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன். அதிமுக தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.







