அதிமுக தலைமை கழகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
2024 டிசம்பரில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் நீதிக்கான கேள்வியான யார் அந்த SIR ? என்று அதிமுக கேட்டது நாடு முழுவதும் எதிரொலித்தது. ஆனால், அன்றைய திமுக அரசு எந்த SIR-ஐ காக்க நினைத்ததோ, அக்கேள்விக்கான பதில் இன்றளவும் மர்மமாகவே உள்ளது. ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்பாவது அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் மறந்துவிட்ட மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசோ, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மற்றுமொரு செய்தி வந்துள்ளது.
பெண்களை ஆபாசமாக பேசுவது, பாதிக்கப்பட்ட பெண்களை கொச்சைப்படுத்துவது என ஒரு பெண் வெறுப்புடைய மனப்பான்மை கொண்ட ஆட்சியில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
தைரியமாக முன்வந்து மாணவி புகார் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம் இப்படிப்பட்ட உணர்ச்சிமிக்க வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும்.
யார் அந்த SIR வழக்கில் மாணவியின் விவரங்களோடு FIR கசிய விட்ட திமுக அரசு போல் அல்லாமல், காவல்துறை உரிய நெறிமுறையோடு இவ்வழக்கினை அணுகி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்”.
(பி.கு. : கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியது போல், விரைவில் அமையப்போகும் அஇஅதிமுக அரசு, அந்த SIR யார் என்பதைக் கண்டறிந்து கூண்டில் ஏற்றும்!) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




