சிக்னலில் குழந்தைகளைப் பிச்சை எடுக்கச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய பார்த்திபன் “பொதுமக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியகம் காவல்துறை நம் நண்பன், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திரத்திற்கு காவல்துறையினர் உதவியாக இருந்தவர்கள்.
காவல்துறைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும், சாலையில் செல்லும்போது மது அருந்துவது, விதிகளை மீறிச் செல்லும்போது காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுப்பது இப்போது அதிகம் இருக்கிறது. காவல்துறைக்கு நாம் ஒத்துழைக்கும் போது நமக்கான சுதந்திரம் நமக்கான சந்தோசம் கிடைக்கும்.
சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்திருந்தாலும் 10 குழந்தைகள் சிக்னலில் பிச்சை எடுப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்குப் பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.
பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சாம்பாரில் இருக்கும் வெங்காயம் போன்று இருக்கும். சாம்பாரில் உள்ள வெங்காயம் சுவையானது அந்த அளவுக்கு என்னுடைய கதாபாத்திரமும் படத்துக்கு உதவியாக இருக்கும். அடுத்தபடியாக திருடர்களை வைத்து படம் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இதயத்தைத் திருடுபவனாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.







