பள்ளி வரைக்கும் போதை பழக்கம் பரவியிருப்பது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது என நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சிவக்குமார் கல்வி மற்றும் அறக்கட்டளை, அகரம் பவுண்டேஷன் நடத்தும் 43-வது ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். அகரம் பவுண்டேஷனில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் சான்றிதழும்
வழங்கப்பட்டது. மேலும் ஓவியர் ராமுவுக்கு கௌரவம் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, சிறிய வயது முதல் எங்களுக்குள் நல்ல சிந்தனையை வளர்த்தவர் எங்கள் தந்தை என்றார். பணம் மகிழ்ச்சி தராது என சொல்வார்கள் அது பொய். நம்மிடம் இருக்கும் பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்தால் அது சந்தோசத்தை தரும். உடல் உறுப்பு தானம் பற்றி எனக்கும் பெரிய தயக்கம் இருந்தது. அதை இங்கு மேடையில் பேசிய ஒரு தம்பி உடைத்து விட்டான். கல்வி என்பது நமது வாழ்கைக்கு தேவையான சிந்தனையை உருவாக்குகிறது.
கற்பித்தல் கற்றல் என்பது அறிவு என்று இருந்தால் இங்கு எல்லாமே மாறும். ஆனால் நமது சமுதாயத்தில் மதிப்பெண்கள் தான் எல்லாமே என்ற நிலைமை இன்று இருக்கிறது. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு 100 மதிப்பெண்கள் வாங்குவது பெரிதல்ல. விளக்கு வெளிச்சம் இல்லாத ஒரு மாணவன் 50 மதிப்பெண் வாங்குவது தான் பெரிது. 4,000 குடும்பங்களுக்கு அதிக பட்சம் 10,000 என்ற அளவில் சூர்யாவின் சொந்த பணத்தில் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கூரை இல்லாத வீட்டில் கூட மனிதம் நிறைய இருக்கிறது. சூர்யா அடிக்கடி சொல்வார் நல்லது செய்யணும் என்று நினைப்பவர்களை அகரம் ஒன்று சேர்க்கிறது. அகரம் 1,500 மாணவர்களுக்கு தனியாக உணவுடன் தங்கும் விடுதி வசதி வழங்கி வருகிறது. நகரத்திற்கு வருவது நரகம் மாறி அங்கிருந்து அரசு பள்ளியில் படித்து இங்கு வந்து சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜாதி பிரச்சனை இன்று வரை கிராமங்களில் இருந்து வருகிறது. பள்ளி வரைக்கும் போதை பழக்கம் மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. என்ன பெயர் என்று தெரியாமல் கூட விற்பனை செய்கிறார்கள். பிரச்சனைகளை சந்திக்க முடியாமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். மது குடித்தாலோ,
சிகரெட் பிடித்தாலோ வாசம் வரும் ஆனால் போதை பொருள் அப்படி இல்லை. அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய நடிகர் சிவக்குமார், கல்வி ஒழுக்கம் இந்த இரண்டும் இருந்தால் போதும் உலகத்தில் உச்சம் தொட முடியும். இதை சொல்வதற்கு சகல தகுதியும் தனக்கு இருக்கிறது என்றார். அப்துல்கலாம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என கூறிய அவர், மாணவர்களுக்கு தற்போது ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
– இரா.நம்பிராஜன்