நாடாளுமன்ற தேர்தலையொட்டி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை களம் யாருக்கு பகுதியில் காணலாம்…
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை கடந்த தேர்தலின்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது திமுக தலைமை. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த முறையும் விருதுநகர் தொகுதி காங்கிரஸுக்கே ஒதுக்கப்படுமாயின், மீண்டும் மாணிக்கம் தாகூரே வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணிக்கு ஒதுக்காமல் விருதுநகர் தொகுதியில் திமுக நேரடியாக களம்கண்டால், தற்போதைய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சரின் சகோதரியுமான தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட மாநில பொதுச்செயலாளரும், பேராசிரியருமான ராம ஸ்ரீனிவாசன் மற்றும் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் பாண்டுரங்கனின் சகோதரர் பெண்டகன் ஜவகர் ஆகியோர் வாய்ப்பு கேட்டு தலைமை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளரான பெண்டகன் ஜவகர் மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான நிறுவனங்களில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கட்சியின் வளர்ச்சிக்கென பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் பெண்டகன் ஜவகருக்கு, மக்கள் ஆதரவு அதிகமுள்ளதாக இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இவைகளைத் தாண்டி பாஜக அல்லது அதிமுக-வுடன் தேமுதிக-வின் கூட்டணி உறுதியாகுமாயின், விருதுநகர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா, காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவியிருந்தார்.