மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டுவீர்கள்..? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அவரும் இதற்கு பதில் அளித்ததால், அவையில் காரசார விவாதம் நடந்தது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசும் விதமாக பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் தெரிவித்ததாவது..
பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் அவை குறித்தும் பதில் அளிக்கிறேன். 2.1% உலக அளவில் நிதி வளர்ச்சி குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. பிரிட்டன் கடுமையான சவாலை சந்தித்து வருகிறது.
இங்கிலாந்து வங்கி 14 முறை தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருகின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியும் நிதி வளர்ச்சியில் சரிவை சந்தித்துள்ளது.
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பவில்லை. இதே சூழலில் இந்தியாவுடைய பொருளாதார நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. 2013-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் உடையக்கூடிய நிலைமையில் இருக்கிறது என கூறிய ஆய்வு நிறுவனங்கள் தற்பொழுது இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என கூறியுள்ளன.
2023-24 நிதியாண்டில் இந்தியாவுடைய ஜிடிபி வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று பல்வேறு நிதி ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன. ஜன்தன் யோஜனா, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
நாட்டின் முதலீட்டுச் செலவு 2013ம் ஆண்டு 3.9 லட்சம் கோடி ரூபாய் என்று இருந்த நிலையில் தற்பொழுது 10.9 லட்சம் கோடியாக உள்ளது. வேளாண்துறைக்கு 2013ல் 21,000 கோடி ரூபாய் வரை மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது. இது 5 மடங்கு அதிகமாகும்
குஜராத்தில் மாநிலத்தில் ஆம் ஆத்மி காங்கிரஸும் எதிர்கட்சிகள், மேற்கு வங்கத்தில் திரிணாமுல், காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் எதிர்க்கட்சிகள், ராஜஸ்தானில் காங்கிரஸ், ஆம் ஆத்மி எதிரெதிர் கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி எதிர்க்கட்சிகள், இப்படி நாடு முழுவதும் இவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் எப்போதுமே ஒருவருக்கொருவர் எதிர்க்கட்சிகள்தான்.
2014 ஆண்டு 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 23 மருத்துவமனைகள் உள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 900 படுக்கைககளுடன் கூடிய திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 750 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 150 படுக்கை வசதிகள் இருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 99 மருத்துவ மாணவர்கள் மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் படிக்கிறார்கள்.” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுரை எய்ம்ஸ்-ஐ எப்போது கட்டுவீர்கள் என முழக்கம் எழுப்பினர்.இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்பு எய்ம்ஸ் எங்கே கேட்டார்கள். தற்பொழுது நாங்கள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டித் தருவோம் என கூறினால் எப்பொழுது கட்டுவீர்கள் என கேட்கிறார்கள்?
நான் தென்னிந்தியாவில் இருந்து வந்துள்ளவர் என்பதன் அடிப்படையில். கூறுகிறேன், தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் 508 ரயில்வே நிலையங்களை இந்தியா முழுவதும் தரம் உயர்த்த அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 76 தென்னிந்தியாவில் உள்ளன. இதற்காக ரூ.2,286 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் 6 வந்தே பாரத் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கட்டமைப்பு மேம்பாடு திட்டமான மித்ரா-வின் கீழ் மொத்தம் உள்ள 7 திட்டத்தில் 3 தென்னிந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த போது தமிழ்நாடு ஆதீனங்களால் கொடுக்கப்பட்ட செங்கோல் பிரதமர் நேருவால் கைத்தடியாக பயன்படுத்தப்பட்டது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? அதனை நாடாளுமன்றத்தில் பெருமைமிகு இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைத்தால் அதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதா?
தமிழ்நாடு – காசி சங்கமம், ஐக்கிய நாடுகள் சபையில் தமிழைப் பற்றி பேசுவது, மனதின் குரல் நிகழ்ச்சியில் ஏராளமான முறை புறநானூறு திருக்குறள் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி பேசி தமிழை பெருமை அடையச் செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டித்தனம் என முந்தைய அரசு கூறி தடை செய்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்தார்.
இந்தி, சமஸ்கிருதத்தை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற தமிழ் திணிப்பு தமிழ்நாட்டில் இருந்தது. தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியை வளர்க்க கூடாது என்ற ஆணவத்துடன் தனி நபர்கள் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ள எங்களை தடுத்தீர்கள். தமிழ்நாட்டு அந்தணர் ஆரியர் அல்ல தமிழர் என்று சொல்கிறது மற்றும் தமிழருடைய பண்பாடும் பழக்கவழக்கங்களும் பெரும்பாலும் வேங்கடத்துக்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வேறான வகையாக இருந்தாலும் விரோதமானவை அல்ல என்று சிலப்பதிகாரம் சொல்கிறது என மாபொசி கூறி இருக்கிறார்.
சிலப்பதிகாரம் நாம் அனைவரும் தமிழர்கள் என்று தான் சொல்கிறதே தவிர திராவிடர்கள் என்று சொல்லவில்லை. சிலப்பதிகாரம் என்ன கூறியிருக்கிறதோ அந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை நடத்துகிறார்”
இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.