ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். ஓராண்டில் 27 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழப்பு செய்துள்ளனர். இதற்கு எப்போது வரும் தடை? என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும் என தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மேலும் ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட கேரள பரிசுச்சீட்டில் ரூ.18 லட்சத்தை இழந்த தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துகொண்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே பெரும் பணத்தை இழந்த பிரபு, தமது வீட்டை விற்க முன்பணம் பெற்று
அதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு
அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு பிரபுவின் கதை தான்
வேதனையான எடுத்துக்காட்டு!

ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27-வது
உயிரிழப்பு இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என
அரசு அறிவித்த பிறகு நிகழ்ந்த 4-ஆவது உயிரிழப்பு இது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை
செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் ஓர் உயிர் கூட பறிபோகக் கூடாது. வரும் ஆகஸ்ட்
3-ஆம் தேதியுடன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று
வலியுறுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.







