டெல்லி முதலமைச்சராக எப்போது பதவியேற்கிறார் #Atishi? வெளியான தகவல்!

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி வரும் 21ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம்…

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி வரும் 21ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார் அரவிந்த கெஜ்ரிவால்.

முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.  இதற்கிடையே, நேற்று காலை 11.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதே நேரத்தில் அதிஷி டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என கூறியிருந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.