மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானபணிகள் எப்போது நிறைவடையும்? என எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்தியாவில் மருத்துவர் நோயாளிகளின் விகிதம் அதிக வேறுபாட்டில் இருப்பது, மருத்துவர்களுக்கு பணிப்பளுவை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதனை சரி செய்யும் வகையில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ உதவியை பெறவும் வாய்ப்பாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டுதான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை ஒன்றிய அரசு கட்டுமான பணிகளை துவங்கவே இல்லை. எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில், “கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுவிட்டது. பணிகள் துவங்கி 2026க்குள் நிறைவடைந்துவிடும்” இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த பதிலை கேட்ட நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானபணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







