தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நேரடியாக புகாரளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : minister_hrce@tn.gov.in.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




