தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் (ஆக. 27) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் துபாய் வழியாக இன்று (ஆக. 29) அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.
சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது அமெரிக்க தொழிலதிபராகவும் உள்ள நெப்போலியன் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் வரவேற்றனர். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம் ஆடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சான் பிரான்சிஸ்கோவில் சுறுசுறுப்பான நடைப்பயணத்துடன் இன்றைய நாளை தொடங்குகிறேன். இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தயாராகி கொண்டிருக்கிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.








