வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில் சதமடித்த தக்காளியின் விலையால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கடைகளில் உயர் ரக தக்காளி கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெயிலின் தாக்கம் காரணமாக வரத்து குறைவு ஏற்பட்டு, தக்காளி விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விளைச்சல் குறைவால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் 800 டன் ஆக இருந்த தக்காளி வரத்து, 300 டன் ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன், சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் பதிவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் தற்காலிகமான இந்த விலை உயர்வை பயன்படுத்தி, தக்காளியை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
மேலும், கூட்டுறவுத் துறையின் கீழ் சென்னையில் 27 பண்ணை பசுமை கடைகள் இரண்டு நகரும் காய்கறி கடைகள் உட்பட மாநில முழுவதும் செயல்படும் 62 கடைகளில் கிலோ 68 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும். இது வெளிச்சந்தையுடன் ஒப்பிடும்போது குறைவான விலை என்றாலும் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக் கூடிய காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடியில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடையை இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன் தக்காளி விலை நேற்று வெளி சந்தையில் 80 ரூபாய் மேல் இருந்தது. கூட்டுறவு கடைகளில் 68 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று 60 ரூபாய்க்கு அனைத்து பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் விற்கப்படுகின்றன. விலை ஏற்றம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பும்.
தக்காளி விலை உயர சமீபத்தில் சில இடங்களில் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக உள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதும் தக்காளி விலை உயர்வுக்கு ஒரு காரணம். கர்நாடகம், ஆந்திராவில் தக்காளி வாங்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளைக்கு 800 டன் வரும். ஆனால் வழக்கத்தை விடவே வரத்து குறைவாக உள்ளது. நேற்றை விட இன்று சற்று அதிகம் வந்துள்ளது. அனைத்து காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காய்கறிகளின் விலைவாசி ஏறும் பட்சத்தில் ஆங்காங்குள்ள நியாய விலை கடைகளிலும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலை வராது என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா