மேகதாது அணை கட்ட, கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ளது மேகதாது. ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் பெங்களூருவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு தான் கர்நாடக அரசு ரூ.9000 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்த கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள மேகதாது அணைத் திட்டம், இரு மாநிலங்களுக்கும் நன்மைத் தரக்கூடியது. ஆனால் தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் கருத்து தெரிவித்து மேலும் சர்ச்சையாக்கினார்.
இவர்களது கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தண்ணீர் எல்லாருக்கும் பொதுவானது தான் என்றும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் விவரம் தெரியாமல் பேசுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்த பரப்பான சூழலில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றுள்ளார். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர், செகாவத்தை நாளை சந்திக்கும் அவர், மேகதாது உள்ளிட்ட தமிழ்நாடு நீர் ஆதார விவகாரங்கள் தொடர்பாக பேச இருப்பதாகக் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய ஜல்சக்தி அமைச்சருடனான தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.