1. 1892ல் முதன் முதலாக காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னை உருவானது. அப்போது, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக முதல் ஒப்பந்தம் உருவானது.
2. ஒப்பந்தப்படி சென்னை மாகாண அரசு அனுமதியின்றி, மைசூரு அரசு, காவிரியின் குறுக்கே அணைகள் கட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3. 1900ம் ஆண்டில் கூட சென்னை மாகாண அரசின் அனுமதி பெற்றே கர்நாடகா, காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்மின் நிலையம் அமைத்தது.
4. அதன் பிறகு 1924ம் ஆண்டு சென்னை மாகாணமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே, 1929ல் கர்நாடகா அரசு, 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையை கட்டியது.
5. 1924 ஆண்டு ஒப்பந்தத்தை மீறி, கர்நாடக அரசு காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவற்றின் குறுக்கே அணைகளை கட்டி, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய நீரை தடுத்தது. இதுவே தமிழக அரசின் அனுமதியின்றி நடந்த கர்நாடாகவின் முதல் விதிமீறல்.
6. 1924-ம் ஆண்டு ஒப்பந்தபடி கர்நாடகா அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 575 டி.எம்.சி., நீர் வழங்க முன் வந்தது.
7. 1924ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு 1974ல் இரு அரசுகளும் புதுப்பிக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக கூறி கர்நாடகா அரசு அவர்கள் மாநிலத்தில் காவிரி பாசன பரப்பை விரிவுபடுத்தியது. காவிரியின் துணையாறுகள் குறுக்கே புதிதாக பல சிறிய அணைகளை கட்டி, காவிரியில் கலக்கும் நீரை தடுத்ததால், தமிழ்நாட்டுக்கு வரும் நீர் குறையத் தொடங்கியது.
8. காவிரி நடுவர் நீதி மன்றம், 1991 ஜூன், 25ல் கர்நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும் என, இடைக்கால தீர்ப்பு கூறியது.
9. 2007 பிப்ரவரி 5ல் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின்படி தமிழ்நாடு 419 டி.எம்.சி, கர்நாடகா, 270 டி.எம்.சி., கேரளா, 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி., நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
10. 2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
11. 2018 ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
12. இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
13. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது.
14. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
15. மேகதாது அணை கட்ட அனுமதியே தரவில்ல, தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, அதனை தள்ளுபடி செய்யவேண்டும் என 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
16. மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என திமுக தெரிவித்தது.
17. கடந்த மே மாதம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றி கட்டப்படுகிறதா என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
18. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது மேகதாது அணை விவகாரம்.