அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள சூழ்நிலையில், அதிமுக சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். இரட்டை தலைமையில் இருந்து ஒற்றைத்தலைமைக்கு மாற வேண்டுமென்றால், அக்கட்சி என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விவரிக்கிறது இந்த கட்டுரை.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை எழுந்தது. இது ஓபிஎஸ் தரப்பினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சு தேவையற்றது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இபிஎஸ் தரப்பை பொறுத்தவரை ஒற்றைத் தலைமை கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் கட்சியின் சட்ட விதி 20 திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட முடியும்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் இடத்தை அதிமுகவில் யாராலும் நிரப்ப முடியாது என்பதால், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக விதி எண் 43ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 11ன் படி பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு வழங்கப்பட வேண்டிய பார்ம் ஏ, பார்ம் பி ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் மேற்கண்ட இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியும்.
அதிமுக விதி எண் 20ல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயணித்திருக்க வேண்டும். இவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். விதி எண் 20ன் உட்பிரிவு 3ன் படி மேற்கண்ட இருவரும் இணைந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே விதி எண் கீழுள்ள பிரிவு 6ன் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு இருவரும் இணைந்து தலைமைச் செயற்குழுவை அமைப்பர். இப்படி தேர்வாகும் தலைமை செயற்குழுவின் காலம் 5 ஆண்டுகளாகும்.
ஒருவேளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டால், இந்த பொறுப்பிற்கு புதிய நபர் தேர்வாகும் வரை , முந்தைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்துவர்.
சட்ட விதிமுறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பாலான தொண்டர்களின் முடிவே அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
இராமானுஜம்.கி










