பெரியார் சிலையை உடைப்பது குறித்துப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்குப் புறம்பானது இல்லை. சிலையிலிருந்த வாசகங்கள் தான் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவை என முன் ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்துப் பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாகக் கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டிவிடுதல், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமெனப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்குப் புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையிலிருந்த வாசகங்கள் தான் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியது என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிருஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகப் பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுவதாகவும், அவை தொடர்பாகத் தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.








