நரிக்குறவர் இனப்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினியின் குற்றச்சாட்டு  தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர்…

நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினியின் குற்றச்சாட்டு  தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர் இன பெண் வீடியோ வெளியிட்டு இருந்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரல் ஆனதை தொடர்ந்து, கடந்த வருடம் தீபாவளி அன்று தமிழக முதலமைச்சர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால் அதிகாரிகள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளின் தொடர்பாக சரியான தகவல்கள் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 1.5 கோடி ரூபாய் செலவில் நலத் திட்டங்கள் பூஞ்சேரி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத்  தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 54 இலவச வீட்டு மனை பட்டாக்கள் 35 ஜாதி சான்றிதழ்கள் ஆறு முதியோர் உதவித்தொகை வாக்காளர் அடையாள அட்டைகள் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப்பட்ட 12 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதமும் திருமதி அஸ்வினி சேகர் அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி கடன் ஆணைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அஸ்வினி சேகர் என்பவர் ரூபாய் 5 லட்சம் கடன் உதவி கோரியதன் பேரில் கடன் வழங்க அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தயார் நிலையில் இருந்தும், தன்னுடைய ரூ.5 லட்சத்திற்கான கடன் வழங்கும் ஆணையையும் சேர்த்து அனைத்து நபர்களுக்கும் ஒன்றாக வழங்கும் பட்சத்தில் தான் பெற்றுக் கொள்வதாக தெரிவித்து வங்கி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர நபர்களுக்கும் ஆணைகள் வழங்கப்படுவது நிலுவையில் உள்ளன.

அஸ்வினி சேகர் என்பவர் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திட இட ஒதுக்கீடு கோரியதன் பேரில் ஜூலை மாதத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தகுந்த கடைகள் வழங்க உத்தரவிட்டதன் பேரில் கடற்கரை பகுதி ஐந்து ரதம் பகுதி ஒத்தவடத் தெரு போன்ற இடங்களில் கடை வழங்க ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் திருமதி அஸ்வினி சேகர் என்பவர் கூறியவாறு கடை இருப்பிடம் அமையவில்லை. அவர் குறிப்பிட்டு கேட்கும் கடையானது ஏற்கனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் ( 17. 8. 2022 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரியதன் அடிப்படையில் மாமல்லபுரம் புது நகர் வளர்ச்சி குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு இன்று (18.08.2022) காலை கடை எண் 66 ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனையும் அவர் நிராகரித்து விட்டார்.

மேலும் புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியில் வசித்து வரும் 55 குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிடம் கட்டிக் கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.07.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட பூஞ்சேரி கிராமத்தின் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.5 கோடி மதிப்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒப்புழைப்பை பெற செங்கல்பட்டு ஆட்சியர் நேரிடையாக சென்று விவரங்களை எடுத்து கூறி உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத்  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.