மக்கள் நலனில் அக்கறை கொண்டு மாநில உரிமைகளை பாதுகாத்து தமிழகத்துக்கு பெருமை தேடி தரும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயமாக அமைப்போம் எனவும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், அதை தொடர்ந்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று முத்திரை பதிக்கும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 -வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் நாளை அவரது தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாகவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அமமுகவினர் மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், ஏழை- எளியோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கியும், கிராமம் முதல் மாநகரம் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றி சிறப்போடு கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்ததை விமர்சிக்கும் துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும்பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தொண்டர்கள் அயராது உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கான உறுதியை நாம் ஏற்கும் நாளாக ஜெயலலிதா பிறந்த நாள் அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டியெழுப்பியகட்சியைப் பாதுகாக்க நினைக்காமல், செய்த தவறுகளிலிருந்து தங்களைத்தற்காத்துக்கொள்ள தீய சக்திகளோடு துரோக சக்திகள் திரைமறைவில் தொடர்பிலுள்ளனர் என்பதை உலகம் அறிந்து சிரிக்கிறது. ஜெயலலிதா மீது உண்மையான பற்றுதல் இல்லாதவர்களால் அவரது உயர்ந்த லட்சியங்களை ஈடேற்ற முடியாது என்பதை உணர்ந்துதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை காலம் நம் கரங்களில் வழங்கியுள்ளது.
தமிழக மக்கள் அனைவரையும் அரவணைத்தும், சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களை ஏற்றம் காணச்செய்திடவும், விவசாயம் செழித்திடவும், தமிழக உரிமைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்திடவும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், எல்லா நிலைகளிலும் சீரான முன்னேற்றத்தையும் மேன்மையையும் அடைய ஜெயலலிதா எடுத்த முன்னெடுப்புகளை நிறைவேற்றுவதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைகள், நெருக்கடிகள் இவையனைத்தையும் கடந்துதான் நாம் நடைபோட்டு வருகிறோம்.
ஜெயலலிதாவின் பவளவிழா ஆண்டில் மார்ச் 15ஆம் தேதி அன்று அமமுக 6-வது அகவை காண்கிறது. இந்த இருபெரும் விழாக்களையும் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடிடுவோம். தமிழகம் முழுவதும் கிளை பரப்பி வளர்ந்து வரும் நமது பயணத்தை, சூழ்ச்சிகளால் ஒருபோதும் தடுத்துவிட முடியாது.
நமக்கெதிராய் இழைக்கப்பட்ட துரோகங்கள் அனைத்தையும் மறந்து, மீண்டும் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி அமைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு நாம் நீட்டிய நேசக்கரத்தை சிலர் ஆணவம் காரணமாக அலட்சியம் செய்து, நம்மை குறைத்து மதிப்பட்டதன் விளைவு, தமிழகத்தில் தீய தி.மு.க.வின் ஆட்சி அமைந்துவிட்டது. தற்போது, அந்த தீய ஆட்சி வழக்கமான தனது கொடூர பாணியை வெளிக்காட்டுகிறது.
கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, மக்கள் தலையில் அடுத்தடுத்து கட்டணம் மற்றும் வரிச்சுமைகளையேற்றி அனைத்துத் தரப்பு மக்களையும் தி.மு.க அரசு வஞ்சித்து வருகிறது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் கலாச்சாரம், அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் என்று அடுத்தடுத்து சமூக தீமைகள் அரங்கேறி வருகின்றன. இவற்றைத் தடுத்திடும் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது.
தமிழகம் தலை நிமிர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிச்சயம் வெற்றி முத்திரையைப் பதிக்கும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மாநில உரிமைகளைப் பாதுகாத்து தமிழகத்திற்கு பெருமை தரும் ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியை அமைக்க உறுதியேற்று உழைத்திடுவோம் என டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா