“திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” – அமைச்சர் நிர்மல் குமார்!

திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?

நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?

எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.

தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?

திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா?

குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.

நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.