“அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வினை தீர்க்கும் தெய்வமாகவும்; முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும் அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் அலங்கரித்து வைத்து அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழங்கள் போன்றவற்றைப் படைத்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் ‘நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்’ என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.