“ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!

இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதற்கிடையே,பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் யாரேனும் உயிரிழந்துள்ளார்களா எந்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“இந்திய ராணுவ நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமே ஆகும். எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கை இன்றியமையாத தேவையாக உள்ளது.
அதேவேளையில், இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்கவும், நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீர்வுகளை நோக்கிய ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்னும் முக்கியத்துவத்தை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது. பாகிஸ்தானில் ஒளிந்துள்ள பயங்கரவாதிகள் மீதான இந்த நடவடிக்கை, நமது நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றும் குடிமக்கள் மீதான வெறுப்பாகத் தடம் புரண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் மத்திய அரசாங்கத்தை விசிக கேட்டுக்கொள்கிறது”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.