மருது பாண்டியர்களின் தியாகத்தை மக்கள் மறந்துவிட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘என் மண் என் தேசம்’ அமிர்த கலச
யாத்திரை (தமிழ்நாடு மாநில விழா) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தபால்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து மண் எடுத்து கலசத்தில் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட மண் கொண்ட கலசங்களை டெல்லி செல்லும் குழுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “2 வருடங்களுக்கு முன்னர் ‘என் மண் என் தேசம்’ தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நாட்டின் பல மூலைகளிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்டு, இந்த கலசங்களின் வழியாக தலைநகர் செல்ல இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகங்கையைச் சேர்ந்த மருது பாண்டியர்களை கொண்டாடினோம். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் போராடினர். தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களை தான் நாம் கொண்டாடினோம். ஆனால், அவர்கள் செய்த தியாகத்தை மறந்துவிட்டோம். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை தாராளமாக எடுத்துக்கொண்டோம்.
1801 ஆம் ஆண்டு இந்த நிலத்தில் தான் சுதந்திர போராட்டம் தொடங்கியது. எத்தனை பேருக்கு நினைவு உள்ளது. ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரத்திற்காக இழந்துள்ளனர். சுதந்திரம் கிடைத்ததற்கு பின்பு கூட மௌண்ட் பேட்டன் பிரபு போன்றவர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தியாவின் முக்கிய துறைகளை ஆங்கிலேயர்கள் தான் வைத்திருந்தனர்.
1905இல் பிரிவினையின்போது இந்து-பெங்கால், முஸ்லிம் பெங்கால் என பிரித்தபோது அனைவரும் எதிர்த்தார்கள். ஏன் அப்படி பிரிக்கவேண்டும். நாம் அனைவரும் ஒரே நாட்டவர் என குரல் கொடுத்தார்கள். அந்தக் குரல் தான் நம் நாட்டின் குரல். அப்படி இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது. இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொடுத்தோம். ஜாலியன் வாலியாபாக் படுகொலையின்போது தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. மக்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள். இது தான் நம் நாட்டின் ஒற்றுமை.
சட்டம் நமக்கான அடிப்படைக் கடமைகளை கொடுத்துள்ளது. அதில், நம் நாட்டின்
சுதந்திரத்துக்காக போராடியவர்களை கொண்டாடி போற்ற வேண்டும் எனக் கூறுகிறது. சுதந்திரம் பெற்றபோது காந்தி சோகமாக இருந்தார். ஆங்கிலேயர் நம் நாட்டிலிருந்து வெளியேறினாலும், பல வகையில் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்றனர் என்று கூறினார். நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்தப் பிடியிலிருந்து விலகினால் தான் இந்தியா சுதந்திரமடைந்ததாக அர்த்தம்.
மத ரீதியாக, சாதி ரீதியாக இன்று நாம் சண்டை போட்டுக் கொள்கிறோம். இதுதான் நமது சுதந்திர இந்தியாவா? தேசிய சுதந்திரத்திற்காக தமிழகத்திலிருந்து காமராஜர் பள்ளி படிப்பை விட்டுவிட்டு போராடினார். இதேபோன்று தமிழகத்தில் நிறைய பேர் இந்த சுதந்திரத்திற்காக போராடினர். அதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள் : சனாதன தர்மத்தின் மிகப்பெரிய சின்னம் அயோத்தி ராமர் கோயில்..! – காங். மூத்த தலைவர் கமல்நாத் பேட்டி
நாம் அனைவரும் அமிர்த கலச யாத்திரையை ஒரு குடும்பமாக, ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும். தேசபற்று என்பது அனைவரின் உணர்விலும் இருக்க வேண்டும். இன்று பாரத நாட்டை அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, நாம் வளர்ந்துள்ளோம். நாம் அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். நம் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துக் கொள்ளுங்கள். திருக்குறள், திருமந்திரம், சுதந்திர போராட்ட தியாகங்களையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நம் பயணம் தொடரும். இது தொடக்கம் தான்” என்று தெரிவித்தார்.









