தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திசை திருப்பவே, ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளதாக வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வி.கே.சசிகலா புரட்சி பயணம் என்ற பெயரில் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு சென்ற அவரை, ஆதரவாளர்கள் கிரேன் மூலம் ரோஜா பூ மாலை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அவர் பரப்புரை வாகனத்தில் இருந்தபடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய வி.கே.சசிகலா, கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் கடல் வழியாக தமிழ்நாடு வருவதை தடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசு உள்ளாட்சி பதவிகளில் இருக்கும் தனது கட்சிக்காரர்களை, கட்சி தலைமை கண்டிக்க வேண்டும். காவல்துறை அவர்களின் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், கட்சியினருக்கு ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க கட்சியின் தலைமைதான் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்பது என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்ட வி.கே.சசிகலா, மின் கட்டண உயர்வை திசை திருப்பவே ஆ.ராசா சர்ச்சை கருத்துகளை பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.







