நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நடந்து முடிந்த நிலையில் வரும் 26ம் தேதி முதல் தனது புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு, “தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் சசிகலா புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த பயணத்தை வருகின்ற 26-06-22 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் சசிகலா, திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும் பொது மக்களையு்ம சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், K.G.கண்டிகை S.V.G.புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும் பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் ஆர்.கே.பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதன்பிறகு அம்மையார்குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்தித்த பின்னர் மீண்டும் தி.நகர் திரும்புகிறார்.
இந்த பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் சசிகலாவை தங்களது முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுக்கள் ஆகியோர் சாதி, மதம் பேதமின்றி அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.