விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நாகபுரி தரச் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் சுமாா்40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று இந்த ஆலையில் உள்ள ஓர் அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கான கருந்திரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருந்திரியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பரவி வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சேடப்பட்டி பாண்டுரங்கன் மகன் முத்துப்பாண்டி (42), கட்டனார்பட்டி பொன்னுசாமி மகன் கருப்பசாமி (60) ஆகியோா பலத்த காயமைடந்தனர்.
இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். முன்னதாக இந்த வெடிவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ் (36), ஊழியர் சுப்புராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர்.







