கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த், தன் மீது பாசமும் அன்பும் பொழிந்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான வசந்தகுமார் மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கு நடத்தப்பட்ட தேர்தலுடன் இதற்கும் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த வசந்தகுமார் எம்.பியின் மகன் விஜய் வசந்தும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில், விஜய் வசந்த் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில், அவர் ட்விட்டரில் கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர்,‘என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.







