முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியான மாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரியும், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை அரிவாளால் கை, தலை, கழுத்து என உடலின் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படியுங்கள் : நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் இபிஎஸ்!
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மணல் கடத்தலைத் தடுத்த
காரணத்திற்காகக் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை, ராமசுப்பிரமணியம், மாரி என்ற இருவர் படுகொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து லூர்து பிரான்சிஸை வெட்டிவிட்டு தப்பியோடிய ராமசுப்பிரமணியம் என்பவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான மாரியை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில், மாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.








