அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாகக் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாகவும், மருத்துவர், தூய்மைப் பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அப்போது தமிழக அரசு தரப்பில், தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 854 கைதிகளில் ஆயிரத்து 295 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 38 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அனைத்து சிறை பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் சிறைக் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல், உயர்மட்ட குழு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.







