சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி, அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒமிக்ரான் என்ற புதிய தொற்று, புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்டி வருகிறது எனக்கூறினார். ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும் பல மடங்கு வேகமாக பரவும் தன்மையுடையது என எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், நோயில் இருந்து விடுபட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 33 லட்சத்து 46 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும், ஜனவரி இறுதிக்குள் 15 முதல் 18 வயதுடையவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.