ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் 5 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரான் மீதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் ”ஹார்மூஸ் ஜலசந்தி ஈரான் கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது” என்றும் ”இந்த பாதையில் செல்லும் எந்த கப்பலாக இருந்தாலும் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் தாக்கப்படும்” என்றும் ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்திருந்தது.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இது மூடப்பட்டால் உலக பொருளாதாரம் பெரும் அழுத்தத்தை சந்திக்கும். மேலும் எண்ணெய் விலை கனிசமான அளவு உயிரும் என அச்சம் எழுந்துள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க கடற்படை யானது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அழைத்துச் செல்ல உதவும் என்று உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,
“வளைகுடா வழியாக பயணிக்கும் அனைத்து கடல்சார் வர்த்தகத்திற்கும், குறிப்பாக எரிசக்திக்கும், மிகவும் நியாயமான விலையில், அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களை வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு (DFC) உத்தரவிட்டுள்ளேன். இது அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும் கிடைக்கும். தேவைப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர்களை அமெரிக்க கடற்படை விரைவில் அழைத்துச் செல்லும். உலகின் தடையற்ற ஆற்றல் ஓட்டத்தை அமெரிக்கா உறுதி செய்யும். அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமை பூமியில் மிகப்பெரியது – இன்னும் பல நடவடிக்கைகள் வரவுள்ளன”
என்று தெரிவித்துள்ளார்.







