விளாத்திகுளம் அருகே ஒரே தெருவை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே காடல்குடியை அடுத்த பூதலபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி ராஜாமணி அம்மாள். கணவரை இழந்த இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் தங்கி வேளை பார்த்து வரும் நிலையில் ராஜாமணி அம்மாள் தனியாக வசித்து வந்தார். இவர் பூதலபுரம் தேவர் சிலை அருகே பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை அரிவாளால் தாக்க முயன்ற போது அவரிடமிருந்து தப்பி ஓடிய ராஜாமணி அம்மாள் அங்கே நின்ற தனியார் பேருந்தில் ஏற முயன்றார். ஆனால் பின்னால் துரத்தி வந்த அந்த மர்மநபர் மூதாட்டி இழுத்துச்சென்று அவரை கடை முன்பே வைத்து அரிவாளால் தாக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை பார்த்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் உடனடியாக அருகில் உள்ள காடல்குடி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பார்த்தபோது அங்கு ராஜாமணி அம்மாள் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் ராஜாமணி அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது வீட்டருகே உள்ள ஒரு வீடு திறந்து கிடந்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த வீட்டில் வசித்து வந்த முடித்திருத்தும் தொழிலாளி பொன்னுச்சாமி என்பவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 60 வயதான பொன்னுசாமியின் மனைவியும் மகளும் விருதுநகரில் வசித்து வருகின்றனர். பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்த பொன்னுச்சாமி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
போலீஸார் இருவர் சடலத்தையும் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ஏஎஸ்பி சந்திஸ், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து காடல்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் பூதலபுரத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் சுப்பையா என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கஞ்சா பழக்கம் உள்ளவர் என்பதால் கஞ்சா போதையில் இரட்டை கொலை நடந்ததா? அல்லது வேறு காரணங்களுக்காக கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.