கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிரான நடவடிக்கை ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தொடர வேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள், வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பொறியியல் 4-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் விசுவநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து, சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் சந்தீப் மற்றும் சென்னை அம்பத்தூர் பாடி பகுதியை சேர்ந்த கௌசிக் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். எங்கிருந்து கஞ்சா வாங்கப்பட்டது என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
– தீபா, மாணவ ஊடகவியலாளர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.