தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகம் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகம் (Coffee Table Book) ஆகியவற்றை வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 2026-ஆம் ஆண்டு மே 10-ஆம் நாள் முதல் மாற்றம் தந்த மக்களுக்காக, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் ஒரு சிறப்பான மக்களாட்சியைத் தந்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பணியாற்றி வருகிறார். இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவுற்றதை முன்னிட்டு, கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளைத் துறைவாரியாகத் தொகுத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் “தமிழரசு” சார்பில் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” தயாரிக்கப்பட்டுள்ளது.
இச்சாதனை மலரானது, இவ்வரசு பொறுப்பேற்ற நூறு நாட்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், துறைகளின் சாதனைகள், தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட கள ஆய்வுப் பணிகள், துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், முக்கிய நிகழ்வுகளின் உரைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள், அவை தொடர்பான விளக்கங்கள், தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் போன்றவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




