தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை…

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்தனர்.  இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, நிறுவனம் முழுவதும் அமோனிய வாயு பரவியது.  இதன் காரணமாக அங்கு பணியில் இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் உள்பட 30 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.