அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழும் பல்வேறு பகுதியில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலைத் தொடர்ந்து நாளை மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொங்கலையொட்டி இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ஏற்கெனவே 400 காளைகள் கலந்து கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கட்டுப்பாடுகளை பின்பற்றி, நாளை நடைபெறும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 400 காளைகளும், ஏறத்தாழ 300 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.
இப்போட்டியை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு காலை 8 மணி அளவில் துவக்கி வைக்கிறார். போட்டி பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
போட்டியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க மருத்துவ குழுவில் மொத்தம் 35 பேரும் மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அதேபோல பாதுகாப்பு பணிக்காக சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.