சென்னையில் விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக செல்லும் காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தாம் கூறும் நபரைதான் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் மூலம் பெறப்படும் இழப்பீட்டு தொகையில் பங்கு கேட்டு பொதுமக்களை மிரட்டிய எழுந்த புகாரின் பேரில் அந்த இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராணி. இவருக்கு என காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பில் தனியாக தமது சொந்த செலவில் ஒட்டுநர் ஒருவரை நியமித்துள்ளார். இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்து என தகவல் வந்தால், அந்த தனியார் ஒட்டுநரை அழைத்துக்கொண்டு அலுவலக ஜீப்பில் சம்பவயிடத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, விபத்து நடந்த இடத்திற்கு அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை சம்பவயிடத்திற்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துவிட்டு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். அதனை ஏற்க மறுக்கும் பொதுமக்களை அவர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர் எடுத்துக் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் தாம்பரம் சரக காவல்துறை கமிஷனர் அமல்ராஜிடம் புகார் கொடுத்துள்ளார். இதேபோல் உளவுத்துறை போலீசாரும் இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை தாம்பரம் சரக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையாவிற்கு தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராணி இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.