நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதால் கோவை மக்கள் முழுமையாக அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்தார். மேலும், கோவையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேறுவதாக குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய அவர், யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்களார்கள் அறிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும், இன்று நடைபெறும் தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவுச் செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையை சிங்காரச் சென்னையாக முதலமைச்சர் மாற்றுவார், என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை மெய்பிக்கும் வகையில் சென்னையில் உள்ள, 200 வட்டங்களையும் திமுகவே கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைது குறித்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வைத்தால், தேர்தல் தோல்விக்கு அதை காரணமாக காட்டி விடலாம் என்பதற்காக எஸ். பி. வேலுமணி போராட்ட நடத்தியதாக கூறினார்.
சென்னை ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கைப் பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், நீண்ட காலமாக வாக்கு செலுத்தி ஏமாற்றமடைந்த மக்களுக்கு உள்ள வெறுப்புணர்வால் வாக்கு பதிவு மந்தமாக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மறைமுக தேர்தல் என்பதால் மக்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளதாகவும், மறைமுக தேர்தல் கிளி ஜோஷியம் பார்ப்பது போல் எனவும் அவர் விமர்சித்தார்.
வெற்றி பெறும் பிற கட்சி வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகள் கூட முழுமையாக வேலை செய்ய மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட சீமான், நாங்கள் தோற்றாலும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு வேலை செய்வதாகத் தெரிவித்தார். மேலும், வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம் எனவும், இதனால் தட்டி கேட்கும் உரிமையை இழப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் நல்லவர்களுக்கு வாக்கு செலுத்தினால் எதிர்காலம் மக்களுக்கு என்றும், இல்லையெனில் ஊழல்வாதிகளுக்கு தான் எதிர்காலம் எனவும் சீமான் தெரிவித்தார்.