திமுக ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என சிலர் திட்டமிட்டு சித்தரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் மதம் சார்ந்த பண்டிகைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும் என பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இது மதச்சார்பற்ற அரசு எனவும், அதன் காரணமாகவே தங்களின் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என பெயர் வைத்ததாகவும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கும் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திட்டமிட்டு ஒரு சிலர் திமுக ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போல சித்தரிக்கிறார்கள். அதை இங்கேயும் பதிவு செய்ய அதிமுக உறுப்பினர் முயற்சி செய்கிறார். இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழி நடத்திய ஆட்சி. மொத்தமாக சொல்ல வேண்டுமேயானால் இது திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் அடிபணிய மாட்டோம்” என குறிப்பிட்டார்.