திருவண்ணாமலை காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் தங்கமணி என்பவர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அப்போது, உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகு விளக்கம் அளிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், அது தொடர்பாக இன்று பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், திருவண்ணாமலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தங்கமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக கூறினார். கைது செய்யப்பட்ட தங்கமணி முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் ஏற்பட்ட வலிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் முதலமைச்சர் கூறினார்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் நியாயமான முறையில் வழக்கு நடைபெறும் என காவல்துறையினர் கூறியதன்படி தங்கமணியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறிய முதலமைச்சர், விசாரணை அறிக்கையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








