தாராபுரத்தில் திருமணத்தை தாண்டிய உறவு விவகாரத்தில் கணவரை கொலை செய்த பெண் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட தாரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தேவி (36). இவர் உடுமலை சாலை பெரியார் சிலை அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தாராபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் சேர்ந்து வாழமல் இருவரும் பிரிந்துவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (35) என்பவரை தேவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தேவிக்கும் தாராபுரம் கொழிஞ்சிவாடியைச் சேர்ந்த இளைஞர் அபிஷேக் (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தன்று தனது இளம் காதலன் அபிஷேக்கையும் அழைத்துக்கொண்டு கீரனூரில் உள்ள கணவரின் வீட்டுக்கு தேவி சென்றார். அங்கு தேவிக்கும் கணவர் தண்டபாணிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தேவி தனது காதலன் அபிஷேக் உடன் சேர்ந்து கணவன் தண்டபாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் வைத்து அதனுடன் கல்லையும் கட்டி, தாராபுரம் மதுரை செல்லும் சாலையில் சிவராஜ் என்பவரது நெல்வயல் கிணற்றுக்குள் உடலை வீசியுள்ளனர்.
இதையடுத்து தண்டபாணியை காணவில்லை என கீரனூர் காவல் நிலையத்தில் அவரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தண்டபாணியை தேடி வந்தனர். தண்டபாணியின் மனைவி தேவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது காதலன் அபிஷேக் உடன் சேர்ந்து கணவன் தண்டபாணியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தாராபுரம் வந்த கீரனூர் போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தண்டபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாராபுரத்தில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.