மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி திருவிழா 15 நாட்கள் தினமும் காலையில் மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 7-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இன்று தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.
தொடர்ந்து காலை 6.30 மணி அளவில் முருகன் சன்னதியில் இருந்து திருத்தேர் புறப்பட்டது. திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.
பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து
இழுத்து சென்றனர். கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேரில் எழுந்தருளியிருந்த முருகபெருமானை பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையை 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்து, இறுதியில் தேர் காலை 11 :30 மணி அளவில் மீண்டும் கோயில் வாசலுக்கு வந்தடைந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.







