திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இரண்டாம் நாளான நேற்று சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும்,  அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முருகப்பெருமானின்  அறுபடை…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இரண்டாம் நாளான நேற்று சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும்,  அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

முருகப்பெருமானின்  அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி அதிகாலை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.  இந்நிலையில்,  கொடியேற்றத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்,  கோயிலுக்கு வருகை தந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு – முக்கிய சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்!

தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவின்,  இரண்டாம்
நாளை முன்னிட்டு 2-ம் திருநாள் மண்டபத்தில்  சாமி குமர விடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.  பின்னர், சாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும்,  தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து,  12 நாட்கள் நடைபெறும் இந்த மாசித் திருவிழாவில் நாள்தோறும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  மேலும் பிப்ரவரி 20 ஆம் தேதி சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற உள்ளது.  இதில் அலங்காரம்,  ஆராதனைகள் என சாமிக்கான அம்சங்கள் அனைத்தும் சிவப்பாக இருக்கும்.

அதேபோல், 21 ஆம் தேதி பச்சை சாத்தி வீதி உலா நடைபெறும்.  அன்றைய தினம் சாமி பச்சை அலங்காரத்தில் சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.