மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை சுற்றித்திரிந்தது. யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அதனை தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் விட்டனர். கடந்த சில வாரத்திற்கு முன்பு அங்கிருந்த வெளியேறிய அரிக்கொம்பன் யானை இரவங்கலாறு மற்றும் பத்துகோடு பகுதிக்குள் புகுந்தது.
சின்னமனூர் வனத்துறையினர் ரேடியோ காலர் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் நிலையில், பத்துக்கோடு பகுதியில் சுற்றித்திரியும் யானை, ரேசன் கடை மற்றும் வீடுகளை உடைத்து அரிசியை தின்று வருகிறது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உயிருக்கு பயந்து வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். ரேசன் கடை ஊழியர்களும் பணிக்கு செல்லாமல் அச்சமடைந்துள்ள நிலையில், அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








