சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், அந்தத் தம்பதியின் மகன் பெங்களூரில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். கதவைத் திறந்து வைத்து உறங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன், பீரோவை திறந்து 49 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார்.
இதையும் படிக்க: ஆஸ்கர் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?
மேலும், பணத்தை திருடியதுடன் அசதியில் வீட்டின் கட்டிலுக்கு கீழ் உறங்கியுள்ளார். குறட்டை சத்தத்தைக் கேட்டு கண் விழித்த அந்த தம்பதியின் மகன் கீழே பார்த்தபோது, யாரோ ஒருவர் படுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த அறையின் கதவைப் பூட்டிய அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த திருடனைக் கைது செய்தனர். விசாரணையில், அந்த நபரின் பெயர் ஏழுமலை என்பதும், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஏழுமலையிடம் இருந்து பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து, அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-ம.பவித்ரா







