கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க, தடுப்பூசி திருவிழாவும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அண்மையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஒருசில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை அனுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். மாநில அரசுகள் சரியாக திட்டமிட்டு, எவ்வளவு எண்ணிக்கையில் தடுப்பூசி தேவை என தெரிவித்தால், தேவையான அளவு தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.







