சென்னை கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படுவதில், அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மருத்துவமனையின் வசதிகளை பார்வையிட்ட அவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில், சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து துறைகளையும் ஊக்கப்படுத்துவது போல, பழமை வாய்ந்த சித்த மருத்துவத்துறையும் மேம்படுத்தப்படும் எனக் கூறினார்.
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை, மீண்டும் தலைமை செயலகமாக மாற்ற முயற்சி நடைபெறுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டிற்கு, பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில், புதிய பன்நோக்கு மருத்துவமனை அமைப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் தெரிவித்தார். .







