பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகக் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அது பெரும் விமா்சனத்துக்கு உள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் அவற்றை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் பொதுமக்களுக்கு மாற்றி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று டிக்கெட் கொடுப்பதற்கு தடையில்லை என அனைத்து மண்டலங்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல், நேற்று நெல்லை மண்டலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததை, திரும்ப பெற வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிடப்பட்டுள்ளார்
மேலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை கேட்டால் மட்டும் கொடுக்கக் கூடாது என்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு அனைத்து பணிமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா